Sunday, December 29, 2013

கவிஞன்

கவிஞன் யானோர் காலக் கணிதம்
கருப்படு பொருளை உருப்பட வைப்போன்!
புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்
பொன்னிலும் விலைமிகு பொருளென் செல்வம்
இவைசரி யென்றால் இயம்புதென் தொழில்
இவை தவ றாயின் எதிர்ப்பதென் வேலை
ஆக்கல் அளித்தல் அழித்தல் இம் மூன்றும்
அவனும் யானுமே அறிந்தலை அறிக
பதவி வாளுக்கும் பயப்பட மாட்டேன்
பாசம் மிகுத்தேன், பற்றுதல் மிகுத்தேன்
நானே தொடக்கம் நானே முடிவு
நானுரைப் பதுதான் நாட்டின் சாட்ட
                                                   - கவியரசு கண்ணதாசன்

Thursday, December 26, 2013

பெரியாரும் விவேகானந்தரும்!

கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்...

-விவேகானந்தர்

“சகோதரர்களே! நான் சொல்வன எல்லாம் எனது சொந்த அபிப்ராயங்கள்தாம் என்று சொல்வதோடு நான் ஒரு சாதரண மனிதன்தான். எவ்விதத் தன்மையும் பொருந்திய தீர்க்கதரிசியல்லன். ஆகையால் தனிமனிதன் என்கிற முறையில்தான் என்னுடைய அபிப்ராயங்களையும் – நான் பார்த்தும் ஆராய்ச்சி செய்தும் அனுபவத்தில் அறிந்ததுமானவைகளைத்தாம் – எதிலும் எனக்குச் சரியென்று பட்டதைத்தான் உரைக்கிறேன். ‘ஒரு பெரியார் உரைத்துவிட்டார்’ என நீங்கள் கருதி அப்படியே கேட்டு நம்பிவிடுவீர்களானால் அப்போது நீங்கள் யாவரும் அடிமைகளே!… யார் உரைப்பதையும் நாம் கேட்டு ‘வேத வாக்கு’ என்று நம்பி நடப்பதால் தான் நாம் இன்று அடிமைகளாக இருக்கிறோம். ஆகவே நான் உரைப்பவைகளை ஆராய்ந்து பாருங்கள். உங்களுக்கு அவை உண்மையென்று தோன்றினால் அவைகளை ஏற்றுக்கொள்ளுங்கள்; இல்லாவிட்டால் தள்ளி விடுங்கள்”
- பெரியார்

Monday, December 23, 2013

அலுவலகத்தில் ஒரு நாள்!

இன்று அலுவலகத்தில் நடந்த ஒரு விரும்பத்தகாத ஒரு நிகழ்வு, எங்களில் சிலரை சில நிமிடங்களுக்கு திக்கு முக்காட வைத்தது.

நாங்கள் பயந்த அளவிற்கு பெரிதாக எதுவும் நடந்து விடவில்லை! பதினைந்து நிமிட கணத்தில் பட்ட வருத்தத்தின் தாக்கத்தைத் தூக்கி எறிந்து விட்டு மகிழ்ச்சியின் எல்லைக்கு இழுத்துச் சென்றது!


இது ஒரு புறம் இருக்கையில் இந்தச் சம்பவம் இரண்டு விடயங்களை முன்னே வைத்தது.

. பொறாமை கலந்த வாழ்த்துக்களையும், போலித்தனமான உதட்டுச் சிரிப்புகளையும் பரிமாறிக் கொள்ளும் அலுவலகச் சூழலில், உண்மையாகவே அடுத்தவரின் துன்பத்தை தன் துன்பமாகவும்,
 அடுத்தவரின் மகிழ்ச்சியைத் தங்களது மகிழ்ச்சியாகவும் எண்ணும் மனிதத்தை சில நிமிடங்கள் காண முடிந்த்தது.

. நகரத்தின் நுகர்வோர் கலாச்சாரத்தில் வாழ்ந்து பழகிவிட்டவர்களுக்கு அடுத்தவர்களின் கஷ்டங்கள் புரிவதில்லை என்றும், யாரும் யார்க்கும் நேரம் ஒதுக்க தயார் இல்லை என்றும்..... நகரங்களில் மனிதம்
 இறந்துவிட்டது என்றும் , வாதாடும் என் நண்பர்கள் சிலரிடத்தில் ”மனிதம் என்பது சூழலைப் பொறுத்து இல்லை, முழுவதுமாக சுயத்தைப் பொறுத்தது ”என்று நான் முன் வைக்கும்
 வாதத்தின் அடி நாதத்தை எடுத்துரைக்கும் வண்ணமாகவே அந்த நிகழ்வு அமைந்தது.

அன்பு, பாசம் , அக்கறை, பரிவு, இரக்கம் இவற்றை நாம் பிறரிடம் செல்த்துவதையும், மனிதத்தை வளர்ப்ப்பதிலும் சூழ் லைக்குச் சற்றே பங்கு இருந்த போதிலும் அது முற்றிலும் தனி மனிதனையும்,
அவனது மனத்தையும் சார்ந்தது.

இருக்கிறதோ, இல்லயோ என்று உறுதியாகச் சொல்ல இயலாத
யாரிடமும் நாம்  கேட்கவும் வேண்டாம், எதையும் தட்டவும் வேண்டாம்!
கொடுங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும்,
திறங்கள் உங்களுக்குத் திறக்கப்ப்படும்!

நாம் அன்றாட வாழ்வின் சந்திக்கக் கூடிய பெரும்பாலான பிரச்சனை ஒரு மனிதனால், இன்னொரு மனிதனுக்கே உண்டாக்கப்படுகிறது.
மனிதனால் உண்டாக்கக் கூடிய பிரச்சனைகளுக்கு மனிதனே தீர்வைத் தேட வேண்டுமே தவிர மாற்று சக்தி அல்ல....

எனவே முடிந்த அளவிற்கு, மனிதம் காப்போம்.......

அது நமது பிரச்சனைகளைத் தடுத்து விடாது என்ற போதிலும், நல்ல மனித மனங்களை நம்மிடம் இழுத்து வந்து நமது பிரச்சனைக்கான தீர்வுகளயும் பெற்றுத் தர உதவும்.....


அன்பைக் கொடுங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும்,
மனக்கதவுகளை திறங்கள் உங்களுக்காய் பல கதவுகள் திறக்கப்ப்படும்!